தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றி விழா 

A large group of people posing for a selfie at an event, celebrating the success of a project. A colorful backdrop features the text 'Thalivar Thambi Thalaimaiyil'.

கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

பொங்கல் திருநாளன்று வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ எனும் திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று பெரும் வெற்றியை வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ பட குழுவினருடன் மத்திய இணை அமைச்சர் திரு சுரேஷ் கோபி, தமிழ் திரையுலகத்தை சேர்ந்த முன்னணி நட்சத்திர நடிகர்களும், இயக்குநர்களும், திரையுலக பிரபலங்களும் என ஏராளமானவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

*இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசுகையில்,*

”எனக்கு ஏழு வயதாக இருக்கும்போதே தந்தையை இழந்தேன். பிறக்கும் போதே பணக்காரராக பிறந்து.. பிறகு ஏழையாகி.. பிறகு மீண்டும் மீண்டும் ஏழையாகி, அதன் பிறகு பணக்காரனாகி இருக்கிறேன். இந்த வெற்றிக்கு எத்தனை முறை கேட்டாலும் இதைத்தான் சொல்வேன் உழைப்பு.. உழைப்பு… குடும்பம்.‌

நான் சிறிய வயதிலிருந்து நானும் நன்றாக இருக்க வேண்டும். என்னைச் சார்ந்த மற்றவர்களும் என்னைவிட நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவன்.‌ அதேபோல் தற்போது நான் இருக்கும் துபாயில் நல்ல பெயரை சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் தான் என்னுடைய எல்லா செயல்பாடுகளும் துபாயில் தான் உள்ளது. ஏனெனில் நான் இருந்த இடத்திற்கு… வளர்ந்த இடத்திற்கு… விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன். 

இந்த நிகழ்வு இந்தியாவில் இன்று.. இந்த தேதியில்.. நடப்பதற்கு என் ஊர் மக்கள் தான் காரணம். அத்துடன் நடிகர் ஜீவாவும் சென்னைக்கு வர வேண்டும் என்று பலமுறை கேட்டுக்கொண்டார். ஒவ்வொருவரையும் மறுத்து வந்த நான் இந்த முறை ஆச்சரியப்படுத்தும் வகையில் அவரை நான் நேரில் வந்து சந்தித்தேன். 

மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நான் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளேன். இந்த வருகையில் மகிழ்ச்சியை அள்ளித் தந்தது இந்தப் படத்தின் பணியாற்றிய அனைவரும் தான். ஜீவாவிற்கும் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் முதலில் எங்களுடைய குடும்ப நண்பராகத்தான் பழகத் தொடங்கினார். 

இது ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றி விழா என்பதை விட எங்களுடைய கண்ணன் ரவி குழுமத்தின் முத்திரையை பிரபலமாக்கிய வெற்றி விழாவாக பார்க்கிறேன். இதற்காக இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

இப்படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் இதில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்றால் அவருடைய குடும்பம் நல்லவிதமாக அமைய வேண்டும். அது அமைந்தால் வெற்றி உறுதி.‌ அந்த வகையில் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி.

சினிமாஸ்கோப்பில் முதன் முதலாக வெளியான ‘ராஜராஜசோழன்’ எனும் படத்தை பார்த்து தான் சினிமா பிரமிப்பு என்னுள் ஏற்பட்டது. அதன் பிறகு நிறைய புத்தகங்களை படிப்பேன். அறிவுப்பூர்வமாக பேசுபவர்களின் பேச்சை கேட்டு ரசிப்பேன். அண்மையில் கூட சீமானின் பேச்சை கேட்டு ரசித்திருக்கிறேன். 

தமிழில் வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களை பார்ப்பேன். இன்றும் கூட இரவு 12 மணியளவில் என்னுடைய வீட்டிற்கு சென்றால்.. ஏதேனும் ஒரு மொழியில் ஒரு திரைப்படம் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும். அதனால் தான் இந்த கதையை தேர்வு செய்யும் போதும் கூட முழு கதையையும் கேட்டோம்.

A woman with long dark hair sitting in an audience, wearing a white blouse, looking thoughtfully ahead with a slight smile, surrounded by other attendees at an event.

நான் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடமும் முழு கதையையும் சொல்லுமாறு கேட்டுக் கொள்வேன். ஏனென்றால் அந்தக் கதை எனக்குப் பிடித்து இருந்தால் தான் மற்றவர்களுக்கும் பிடிக்கும் என்ற எண்ணம்.‌ கதை சொல்பவர்கள் கதை சொல்வது எனக்கு பிடிக்கவில்லை என்றால்.. இதைவிட சிறப்பான கதையை தயார் செய்து கொண்டு வாருங்கள். தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்கும் எண்ணம் இருக்கிறது. திட்டமும் இருக்கிறது. என்றுதான் நம்பிக்கையுடன் பதில் அளிப்பேன்.‌

இந்தக் கதையை கேட்ட உடனேயே பிடித்து விட்டது. யாரும் இதுவரை தொடாத சப்ஜெக்ட். அத்துடன் இந்த கதை மீது ஜீவாவிற்கும் நம்பிக்கை இருந்தது. அவருடைய கேரியரில் இந்தப் படம் வித்தியாசமாக இருக்கும் என்றும் நானும் நம்பினேன். இந்தப் படம் எனக்கு 80 சதவீதம் தான் திருப்தியை தந்தது. இதை நான் இயக்குநரிடமே தெரிவித்து விட்டேன். இன்னும் சிறிது காமெடி காட்சிகள் இருந்தால்.. மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருக்கும். 

A man with dark hair and a mustache stands confidently in front of a colorful backdrop decorated with flowers and festive elements, wearing a light-colored button-up shirt.

இந்த படத்திற்கு குறுகிய நாளில் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தி மக்களிடம் சென்றடைய செய்திருந்தோம். ஏனெனில் இன்று நல்ல படங்கள் வெளியானால்.. அவை திரையரங்குகளில் மூன்று அல்லது நான்கு நாட்கள் தான் வெற்றிகரமாக ஓடுகிறது. ரசிகர்கள் அப்படத்தை பற்றி கேள்விப்பட்டு திரையரங்கத்திற்கு செல்வதற்குள் அப்படம் திரையரங்கத்தில் இருந்து எடுத்து விடுகிறார்கள்.‌ நான் இந்தப் படத்திற்கு ஒரே நாளில் அனைத்து வகையான விளம்பரங்களையும் செய்து படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தோம். 

இனி என்னுடைய எல்லா திரைப்படங்களும் ஒரே நாளில் உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும். இது என்னுடைய திட்டங்களில் ஒன்று.‌ இந்த உலகத்தில் எந்தெந்த இடங்களில் தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் என்னுடைய படங்களை திரையிடுவேன்.  

என்னுடைய குறிக்கோள் பணம் அல்ல நல்ல படத்தை எங்களுடைய நிறுவனம் கொடுத்தது என்ற நற்பெயருக்காக தான் கடுமையாக உழைத்து வருகிறோம். ஒரே தருணத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களை உருவாக்கி வருவதால் வெற்றி தோல்வி குறித்து கவலைப்படாமல் பணியாற்றி வருகிறோம் ” என்றார். 

*இணை தயாரிப்பாளர் தீபக் ரவி பேசுகையில்,”

 ”மிகவும் மகிழ்ச்சி. இயக்குநர் நிதிஷ் கதை சொல்லும் போது கன்டென்ட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படமாக உருவான பிறகு அவருடைய உழைப்பு என்னை வியக்க வைத்தது. நானும் அப்பாவும் கதை கேட்கும்போது யார் ஹீரோ என்று கேட்க மாட்டோம். முதலில் கதையை தான் கேட்போம். அதன் பிறகு அந்த கதைக்கு யார் பொருத்தமாக இருப்பார் என நாங்கள் விவாதிப்போம். தமிழில் திரைப்படம் தயாரிப்பது என்பது எங்கள் மனதிற்கு நெருக்கமானது. ஏனென்றால் தாய் மொழியும் கூட. அதனால்தான் தமிழ் திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இந்தப் படத்தின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

A man in a traditional outfit holding a colorful sign that reads 'THALAIVAR THAMBI THALAIMAIYIL,' with decorative flower garlands and vibrant background elements.

*நடிகர் ஜீவா பேசுகையில்,*

” மேடையில் என்னுடன் இருக்கும் படக்குழுவினர் அனைவரும் நான்கு ஐந்து மாதங்கள் குமுளியில் ஒன்றாக குடும்பம் போல் தங்கி இருந்தோம். அனைவரும் ஒன்றிணைந்து நல்ல மனதுடன் இந்தப் படத்தில் பணியாற்றினோம். இந்த படம் வெளியாகி அனைவருடைய மனதிலும் இடம் பிடித்திருக்கிறது. தமிழ் மக்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தான் பணியாற்றினோம். படப்பிடிப்பு அனுபவங்களை ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம். தலைவர் தம்பி தலைமையில் படத்திற்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்து இருப்பதற்கு அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றியதும் ஒரு காரணம். அதனால் இதற்கு முழு முதல் காரணமான இயக்குநர் நிதிஷுற்கு முதல் நன்றி. அவர்தான் இந்த படத்தின் ஹீரோ. அவர்தான் இங்கு கூடியிருக்கும் ஒவ்வொரு கலைஞர்களிடம் இருக்கும் திறமையை வெளியே கொண்டு வந்தார்.

எல்லோரும் இதனை சின்ன படம் என்று சொல்கிறார்கள். ஆனால் எங்களை பொறுத்தவரை இது மிகப்பெரிய படம். இயக்குநர் முதலில் இந்தப் படத்தை இரண்டு மணி நேரத்திற்குள் நிறைவடைந்து விடும் என்று தான் சொன்னார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளத்திற்காக இன்னும் சற்று கூடுதலான நேரத்திற்கு படத்தின் கதை இருக்க வேண்டும் என்று விவாதித்தோம். படப்பிடிப்பு தளத்தில் நடிகர்களின் பங்களிப்பை பார்த்தவுடன் ஒவ்வொரு காட்சியையும் இயக்குநரும், கதாசிரியர்களும் மேம்படுத்துவார்கள். 

இதைத்தொடர்ந்து எங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய குமுளி மக்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஏனெனில் இந்த படம் சிறப்பாக வரவேண்டும்… விஸ்வரூப வெற்றியை பெற வேண்டும்… என்று சொல்லி, அதற்காக அந்த ஊர் மக்கள் இறைவனை பிரார்த்தித்து கிடா வெட்டினார்கள். படப்பிடிப்பு நிறைவடையும் தருணத்தில் குடும்பமாக பழகி, பிரியும் தருணத்தில் நாங்கள் இதுவரை இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்று சொல்லி நெகிழ்ச்சியுடன் கண்ணீர் விட்டனர். அது மறக்க முடியாத அனுபவம். 

இந்தப் படத்தில் நடித்திருக்கும் பெரியவர்.. அந்த முதிய வயதிலும் எங்களுக்கு உச்சகட்ட காட்சியில் அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பை வழங்கி எங்களை ஆச்சரியப்படுத்தினார். அவரைப் பார்த்தவுடன் எனக்கும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று நம்பிக்கை ஏற்பட்டது.‌ படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு ஏதேனும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்தால்.. அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் கிடைத்த அனுபவங்கள் அனைத்தும் நல்ல நினைவுகளாக பதிவாகி இருக்கிறது. தமிழில் நிறைய வெற்றி பெற்ற படங்களில் நடித்திருந்தாலும்.. இது போன்றதொரு பிரம்மாண்ட வெற்றி படத்தை எனக்கு வழங்கிய இயக்குநர் நிதேஷுக்கு மீண்டும் நன்றி.

இந்தப் படத்தைப் பற்றி சுவாரசியமான விசயங்களை சொல்லுங்கள் என்று என்னிடம் கேட்டால் எல்லா சம்பவங்களும் சுவாரசியமானது தான் என்று சொல்வேன். 

இந்த படத்திற்கும் படக்குழுவினருக்கும் தயாரிப்பாளர்களான கண்ணன் ரவி மற்றும் அவருடைய மகன் தீபக் ரவி ஆகிய இருவரும் மிகப்பெரிய ஆதரவை அளித்தனர். 

துபாயில் உள்ள அவருடைய அலுவலகத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் வருகை தந்திருந்தனர். அவரை சந்தித்து இப்படத்தின் கதையை முழுவதுமாக இயக்குநர் சொன்னார். அதைக் கேட்டுவிட்டு உறுதியாக இப்படத்தை உருவாக்கலாம் என்று மகிழ்ச்சியுடன் சொன்னார். 

இந்தத் தருணத்தில் நடிகர் வி டி வி கணேசுக்கும் நன்றி. அவர்தான் இயக்குநரை எனக்கு அறிமுகப்படுத்தினார். கதையைக் கேட்டவுடன் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று என்னுடைய விருப்பத்தை தெரிவித்து விட்டேன். உடனே அட்வான்சும் கொடுத்து விட்டேன். அதன் பிறகு தான் தயாரிப்பாளரை தேடத் தொடங்கி, அதன் பிறகு தயாரிப்பாளர் கண்ணன் ரவியை சந்தித்தோம்.

வெங்கட் பிரபு மூலமாக கண்ணன் ரவியை கிரிக்கெட் போட்டி ஒன்றினை நட்சத்திரங்களுடன் இணைந்து பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் முதலில் அவரை தொடர்பு கொண்டேன். அதற்காக அவர் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்து கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசிக்க வைத்தார். அந்த மைதானத்தில் கண்ணன் ரவி மற்றும் அவரது மகன் தீபக் ரவி ஆகியோரின் விருந்தோம்பல் எங்களை வியக்க வைத்தது. அங்கிருந்துதான் தயாரிப்பாளருடனான எனது நட்பு தொடங்கியது.  

என்னுடைய தந்தையார் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சவுத்ரி இதுவரை 99 திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். இதுவரை அவருக்கு யாரும் பாராட்டு விழா நடத்தியதில்லை. துபாய் தமிழ் சங்கத்தில் கண்ணன் ரவி அவர்களின் ஆதரவுடன் அவருக்கு பெரிய பாராட்டு விழா நடைபெற்றது. அதுவே எனக்கு மிகப்பெரிய சாதனையாக இருந்தது. நான் வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் என்னுடைய தந்தைக்கு இப்படி ஒரு பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்தியதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். விழாவிற்கு வருகை தந்திருக்கும் என்னுடைய தந்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சௌத்ரிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

*நடிகர் சுரேஷ் கோபி பேசுகையில்,*

”இப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் நானும் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். நடிகர் ஜீவாவிற்கு இது கம்பேக் படமாக அமைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தயாரிப்பாளர் சூப்பர் குட் சௌத்ரியை அவருடைய நண்பரான குட் நைட் மோகன் காலத்திலிருந்து எனக்கு நன்றாக தெரியும். என்னுடைய சில படங்களுக்கும் சௌத்ரி சார் நிதி உதவி செய்திருக்கிறார். 

எனக்கு தயாரிப்பாளர் கண்ணன் ரவியை கடந்த எட்டு மாதங்களாகத் தான் தெரியும். ஆனால் எட்டு வருஷம் பழக்கத்தை போல் மிகவும் அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் பழகி, இப்போது நாங்கள் நெருக்கமான நண்பர்களாகி விட்டோம். 

நான் நடித்த ஜானகி வெர்சஸ் கேரளா ஸ்டேட்ஸ் படத்திற்கு துபாயில் டிக்கெட் எல்லாம் ஸ்பான்சர் செய்தது இவர்தான் என பிறகு தான் எனக்கு தெரிந்தது. பிறகு மற்றொரு நிகழ்ச்சிக்காக துபாய்க்கு சென்ற போது அந்த நிகழ்ச்சிக்கும் இவர்தான் ஸ்பான்சர். துபாயில் ஏதேனும் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகள் நடந்தால் அதற்கு முக்கிய காரணமாக கண்ணன் ரவி திகழ்கிறார். கடந்த வாரம் கூட துபாயில் இருந்தபோது.. இந்த நிகழ்ச்சியை பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் சொல்லவில்லை. துபாயில் வாழும் இந்தியர்களுடைய நிகழ்ச்சி ஒன்று டெல்லியில் நடைபெற்றது. அதற்கும் இவர்தான் ஸ்பான்சர். இன்று வர முடியாத சூழல் இருந்தாலும் கண்ணன் ரவி கேட்டுக்கொண்டதற்காக இங்கு வருகை தந்திருக்கிறேன். ஜீவா நடிப்பில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். நான் என்னுடைய திரைப்படங்களின் வெற்றி விழாவில் கலந்து கொள்வதே கடினம். ஆனால் தமிழ் படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி. ” என்றார்.

Leave a Reply

error:

Discover more from view7media

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading