‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

A group of people posing for a photo at a film promotional event, with a large poster in the background announcing the movie's release date of May 28, 2026.

‘பிளாஸ்ட்’ படத்தில் ஜான் கொக்கன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை வீரமணி கணேசன் கவனித்திருக்கிறார். ஃபேமிலி ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஜி எஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் புரொடியூசராகவும், ஐஸ்வர்யா கல்பாத்தி அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராகவும் பங்காற்றியுள்ளனர்.

இப்படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Two men posing for a photo in front of a colorful backdrop featuring the AGS Entertainment logo and promotional text.

இந்நிகழ்வில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் பேசுகையில், ”இது என்னுடைய முதல் மேடை. என் மீது நம்பிக்கை வைத்து திரையுலகில் பணியாற்ற அனுமதித்த பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி. இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு என்னுடைய சிறப்பு நன்றி. அவர்தான் என்னுடைய திரையுலக குரு. அவருடைய ‘லவ் டுடே’ படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு.. கதை எழுதி அவரிடம் சொன்ன போது, அவர்தான் ஏஜிஎஸ் நிறுவனத்தில் கதை சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். ஐஸ்வர்யா கல்பாத்தி- அர்ச்சனா கல்பாத்தி- அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் அகோரம் சாரிடம் கதையை சொன்னேன். கதையை சொல்லி முடித்ததும், இந்த படத்தை நிச்சயமாக தயாரிக்கிறோம் என்றார். அந்தத் தருணம் என்னால் மறக்க முடியாது. இதற்காக ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.

இந்தப் படத்தை எந்த இடத்திலும் சமரசம் எல்லாம் முழு சுதந்திரத்துடன் உருவாக்கியிருக்கிறேன். இதற்காக மீண்டும் ஒருமுறை ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய முதல் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதற்காகவே நான் பெருமிதம் அடைகிறேன். அவருக்கு நன்றி. அபிராமி- ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட ஒவ்வொரு நட்சத்திரங்களும் இந்த படத்தில் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். ஒளிப்பதிவாளர் – இசையமைப்பாளர்- பட தொகுப்பாளர் -சண்டை பயிற்சி இயக்குநர் – என ஒவ்வொருவரும் தங்களுடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை புதுமுக இயக்குநரான எனக்கு வழங்கியதற்கு நன்றி.

A group of people posing for a photo in front of a promotional backdrop featuring the movie title 'BLAST' and release date '28 MAY 26'.

‘பிளாஸ்ட்’ ஆக்ஷன் படம் தான். ஆனால் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து மகிழும் வகையில் இருக்கும். படத்தை பார்க்கும் போது எல்லா அப்பாக்களும் படத்துடன் தங்களை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களுடன் படத்தை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். நம் குடும்பம் என்பதை உணர்வீர்கள். சமூகத்திற்கு தேவையான பல விஷயங்களை சொல்லி இருக்கிறோம். ஆனால் அதனை பிரச்சாரமாக சொல்லாமல் கதையுடன் சுவாரசியமாக சொல்லி இருக்கிறோம். அனைவரும் மே 28ம் தேதி அன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்தை பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் பேசுகையில், ”தமிழ் படங்களில் பணியாற்றுவதற்காக நிறைய கதைகளை கேட்டிருக்கிறேன். ஏதாவது சுவாரசியமான விசயங்கள் இருந்தால்.. அதில் தான் பணியாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். தமிழ் திரை உலகிற்கு வரும் போது முன் தயாரிப்புடன் தான் வருகை தர வேண்டும். ஏனென்றால் தமிழ் சினிமா என்பது கடல் போன்றது. இயக்குநர் சுபாஷ் கதை சொன்னார். அந்த கதையைக் கேட்ட போது இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. கதையை மிகவும் விரிவாகவும் டீடெய்லாகவும் அதிலும் ஆக்ஷன் காட்சிகள் இப்படித்தான் வரும் என்ற விளக்கத்துடனும் சுபாஷ் கதையை சொன்னார். அதை கேட்டதும் உற்சாகமாகி, இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என தீர்மானித்தேன்.

புதுமுக இயக்குநர் என்பதால் நானும் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்பதால் இதற்கு முன் நான் செய்த பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, புதிதாக இதில் பல விஷயங்களை முயற்சி செய்து இருக்கிறேன். படமாக்கப்பட்ட காட்சிகளை எனக்கு இயக்குநர் அனுப்பினார். அதை பார்த்தவுடன் இவர் புது முகமாக இருந்தாலும் வேலை வாங்குவதில் தேர்ச்சி பெற்றவர் என்பதை தெரிந்து கொண்டேன். முழு படத்தையும் பார்த்த பிறகு எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அவர் கதையை விட்டு எங்கும் செல்லாமல் அந்தக் கதையை நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு கலைஞரிடமிருந்து தனக்கு தேவையானதை வாங்கி அற்புதமாக படத்தை உருவாக்கியிருக்கிறார். முதல் படத்திலேயே சுபாஷ் இப்படி கடுமையாக உழைத்து இருப்பதை பார்த்து வியந்தேன். அவர் மீது நம்பிக்கை வைத்து ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி.

ஒவ்வொருவரிடத்திலும் தனித்திறமை இருக்கும். ஒரு எறும்பிடம் கூட திறமை இருக்கும். அதை நேஷனல் ஜியோகிராபிக் சேனலின் ஒளிப்பதிவாளர் ‘ஜூம்’ செய்து மக்களுக்கு காண்பித்தால்தான் அதன் திறமை மக்களுக்கு தெரிய வரும். அந்த வகையில் சுபாஷின் திறமையை ‘ஜூம்’ செய்து பார்த்து வாய்ப்பளித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘கே ஜி எஃப்’ படத்திலிருந்து என் மீது அன்பு வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறீர்கள். அந்த வகையில் புதுமுக இயக்குநர் சுபாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்’ படத்திற்கும் ஆதரவு தாருங்கள். இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பாருங்கள். அப்போதுதான் இதன் சிறப்பம்சம் உங்களுக்கு பிடிக்கும். இது தியேட்டரிக்கல் சப்ஜெக்ட். இந்த படத்தில் பல சர்வதேச அளவிலான இசைக் கலைஞர்கள் பங்களிப்பினை வழங்கியுள்ளனர். இது என்னுடைய திரை இசைப் பயணத்தில் சிறந்த படம் என்று சொல்வேன்,” என்றார்.

நடிகை பிரீத்தி முகுந்தன் பேசுகையில், ” என்னுடைய திரையுலக பயணத்தில் இந்தப் படம் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இது போன்றதொரு கதையை தேர்வு செய்து அதற்கு என்னைப் போன்ற வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்பை வழங்கி படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.

நிலா கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர் சுபாஷிற்கு நன்றி. பொதுவாக பெண்களுக்கு இதுபோன்ற பவர்ஃபுல்லான ஆக்ஷன் கேரக்டர்கள் எழுதப்படுவதில்லை. அதனால் தான் கதையை சொல்லும் போதே இதில் நடிக்க விரும்பினேன். அதிலும் இது போன்ற கதாபாத்திரங்கள் அரிதாகவே என்னை போன்ற வளரும் கலைஞர்களுக்கு கிடைக்கும். இது போன்றதொரு கதாபாத்திரத்தை எழுதி அதனை காட்சிப்படுத்தி கூடுதல் முக்கியத்துவம் வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அர்ஜுன், அபிராமி ஆகியோருடன் திரையை பகிர்ந்து கொண்ட அனுபவம் மறக்க முடியாதது. இவர்களிடமிருந்து படப்பிடிப்பு தளத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் போது பொறுமையாக விளக்கமளித்து என்னிடம் இருந்து ஆக்ஷன் கலந்த நடிப்பை வரவழைத்ததற்காக சண்டை பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

நடிகை அபிராமி பேசுகையில், ”இந்த மேடையில் நிற்பதற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த ஆண்டில் என்னுடைய நடிப்பில் வெளியாகும் முதல் படம் இது. ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்திருக்கிறேன். இதுவும் மறக்க முடியாத தருணம். அதனால் அவருக்கு என் நன்றி. எங்கள் இருவரையும் மீண்டும் இணைந்து நடிக்க வைப்பதற்கு ஏன் 25 ஆண்டுகள் ஆனது என்று தெரியவில்லை.

ப்ரீத்தியுடன் இணைந்து பணியாற்றும்போது மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் இருவருக்கும் ஒரே வகையான வேவ் லென்த் இருந்தது. அதனால் படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் இருவரும் உற்சாகமாக இருந்தோம். பொதுவாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதாபாத்திரங்களும், கதையும் எழுதுவது குறைவு. இந்த படத்தில் எங்கள் இருவருக்கும் கூடுதலாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினருக்கு நன்றி.

பெண்கள் தலைமை ஏற்று நடத்தும் எந்த நிறுவனமும், நிர்வாகமும் நன்றாக இருக்கும் என்பதற்கு ஏஜிஎஸ் நிறுவனம் சிறந்த சான்று. அர்ச்சனா கல்பாத்தியும், ஐஸ்வர்யா கல்பாத்தியும் ஒவ்வொரு விஷயத்தையும் நேர்த்தியாக கையாள்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி.

நான் வாழ்க்கையில் ஒருவரையும் கை நீட்டி அடித்ததில்லை. எனக்கும் வன்முறைக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் இந்தப் படத்தில் என்னை வயலன்ட்டாகவும், டெரராகவும் காட்சிப்படுத்தியதற்காக சண்டை பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவிற்கு நன்றி. அவருக்கு மட்டுமல்ல அவருடைய குழுவின் பணியாற்றிய அனைத்து சண்டைக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

நான் சினிமாவில் காமெடி- ஹாரர்- ரொமாண்டிக் -என பல ஜானரில் நடித்திருக்கிறேன். ஆனால் முதன் முறையாக ஆக்ஷனில் நடித்திருக்கிறேன். இப்படியும் என்னால் நடிக்க முடியும் என்று என் மீது எனக்கே நம்பிக்கையை வரவழைத்த சண்டை பயிற்சி இயக்குநருக்கும், அவருடைய குழுவினருக்கும் நன்றி.‌

இந்தப் படத்தில் இசை மிக முக்கிய பங்கு வகிக்கிறது .இதற்காக இசையமைப்பாளர் ரவி பஸ்ரூருக்கும் நன்றி.

இயக்குநர் சுபாஷ் எனக்கு தம்பி மாதிரி. இந்தப் படம் வெற்றி பெறும் என்று எனக்குத் தெரியும். அதனால் அவருடைய வெற்றியில் நானும் சிறிய பங்காக இருந்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய எழுத்து அழுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்தது . இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு அவருடைய அம்மா தான் இன்ஸ்பிரேஷன். அவருடைய அம்மாவும் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியவர். அதனால் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது எனக்கு தான் பெருமை. அதை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படம் தியேட்டரிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்க்கான எல்லா எலிமெண்ட்ஸும் கொண்ட படம். சின்ன திரைகளில் பார்த்தால் இதன் முழுமையான அனுபவம் உங்களுக்கு கிடைக்காது. மியூசிக் -ஆக்ஷன்- கேமரா- என எல்லா விஷயங்களையும் பெரிய திரையில் பார்த்து அனுபவியுங்கள். எல்லோருக்கும் பிடித்த படமாக இது இருக்கும்,” என்றார்.

கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், ”ஏஜிஎஸ் நிறுவனத்தின் 20வது ஆண்டு இது. நீங்கள் அளித்து வரும் தொடர் ஆதரவின் காரணமாக நாங்கள் ஏராளமான திறமைமிக்க புது முகங்களை அறிமுகப்படுத்துகிறோம். எங்களுக்கு இத்தகைய தைரியத்தை வழங்கியதற்காக உங்கள் அனைவருக்கும் எங்களுடைய நன்றி.

எல்லோரும் அடுத்த தலைமுறை எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருப்போம். இது ஜென் ஸீ யின் படம். இது பெண்களை உலக அளவில் பெருமை படுத்துகிற படைப்பு. இப்படி ஒரு படைப்பை தயாரித்ததற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இதை போல் பெண்களை திரையில் காட்சிப்படுத்துவதை வரவேற்கிறேன். இத்தகைய பெண் கதாபாத்திரங்களை எழுதியதற்காக இயக்குநர் சுபாஷுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தொடர்ந்து பெண் கதாபாத்திரங்களை இதே போன்று வடிவமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.‌

இந்தப் படம் ஒரு பெண் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை பற்றி பேசுகிறது. தற்போது இந்த சமூகத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் தான் அதிகம் இருக்கிறது. ஆனால் இந்த சமூகத்தில் உள்ள ஒரு பெண் தற்காப்பு கலையை கற்றுக் கொண்டால் அவள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதையும் இந்தப் படம் சொல்கிறது. அதுதான் இந்த ‘பிளாஸ்ட்’ திரைப்படம். இந்த கருத்திற்காகவே இந்த படத்தை நாங்கள் தயாரிக்க வேண்டும் என தீர்மானித்தோம்

இதை உருவாக்க வேண்டும் என்றால் அப்பா கதாபாத்திரத்தில் எங்களுக்கு நடிகர் அர்ஜுனை தவிர வேறு யாரும் சிந்தனைக்கு வரவில்லை. ஏனெனில் அவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த விஷயத்தை அவர் சொன்னால் ரசிகர்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தோம். எங்களது விருப்பத்தை ஏற்றுக் கொண்டு இப்படத்தில் நடித்த ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு நன்றி.

இந்தக் கதையில் எல்லோருக்கும் முக்கியத்துவம் உண்டு. அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோருக்கும் நன்றி. அவர்கள் இந்த படத்திற்காக அதிலும் குறிப்பாக சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்காக தங்களுடைய முழுமையான அர்ப்பணிப்பை வழங்கினர்.

இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரை தமிழில் அறிமுகப்படுத்துவதை ஏஜிஎஸ் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. அவருடைய ரசிகர்கள் நாங்கள். இந்த படத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை அவர் வழங்கி இருக்கிறார். இந்தப் படத்திற்கு அவர் ஒரு ஜீவன். இந்த படத்திற்காக அவரின் இசைக் கோர்வை நிச்சயம் பேசப்படும்.

இந்த திரைப்படம் ஒரு கூட்டு முயற்சி. தமிழ் சினிமாவிற்கு புது முகங்களுடன் ஒரு புதிய முயற்சியையும் முன்னெடுத்து இருக்கிறோம். இதற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.

நடிகர் அர்ஜுன் பேசுகையில், ”வரலாறு காணாத ஒரு வெற்றியுடன் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்த என் நண்பர் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

‘பிளாஸ்ட்’ திரைப்படம் ரியலி ஒரு பிளாஸ்ட் தான். நான் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கராத்தே மாஸ்டர் கதாபாத்திரத்தை நான் இப்போதுதான் முதன்முறையாக ஏற்று நடித்திருக்கிறேன். இதற்காக இயக்குநர் சுபாஷிற்கு முதல் நன்றி.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரின் தன்னம்பிக்கையை நான் பார்த்தேன். ஒவ்வொரு இயக்குநருக்கும் நம்பிக்கை மிக முக்கியம். நான் ஏராளமான புது முக இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். அதில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் சாதுரியமானவர். தனக்கு தேவையானதை நேர்த்தியாக கலைஞர்களிடமிருந்து வாங்கி விடுகிறார். இந்தப் படத்தில் பணியாற்றிய இளம் திறமைசாலிகளிடமிருந்து நான் நிறைய புது விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் குறிப்பிட்டது போல் ஏஜிஎஸ் நிறுவனம் ஒவ்வொரு திறமைசாலிகளையும் ஜும் செய்து பார்த்து தேர்வு செய்கிறார்கள். ஆனால் என் மீது அவர்கள் இதுவரை ஜும் செய்யவில்லை. இப்போதுதான் இந்த நிறுவனத்துடன் நான் முதன் முதலாக இணைந்து பணியாற்றுகிறேன். அவர்களுடைய தொழில் நேர்த்தி, அணுகுமுறை, எல்லாம் சிறப்பான அர்ப்பணிப்புடன் இருக்கிறது. ஐஸ்வர்யா கல்பாத்தி இரவு இரண்டு மணி அளவில் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தார். அதை பார்த்ததும் எனக்கு வியப்பாகவும் , இருந்தது மகிழ்ச்சியாகவும் இருந்தது.

நடிகை அபிராமி உடன் நான் முதன் முதலாக நடிக்கும் போது அவர் மலையாளத்தை மட்டும்தான் பேசுவார். உடைந்த தமிழில் தான் அப்போது பேசுவார். ஆனால் இப்போது தமிழில் பேசி அசத்துகிறார். அதே சமயத்தில் நடிகையாக பல சாதனைகளை படைத்திருக்கிறார். அவர் நடிகை மட்டுமல்ல பாடகியும் கூட. இந்தப் படத்தில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கடினமாக உழைத்து அர்ப்பணிப்புடன் இந்த படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அதை நீங்கள் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதே போல் நடிகை ப்ரீத்தி முகுந்தனை பார்த்து வியக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் எப்போது பார்த்தாலும் பயிற்சி செய்து கொண்டிருப்பார். அவர் அடிப்படையில் நல்லதொரு நடன கலைஞர். ஆக்ஷன் காட்சிகளில் அவருடைய கால் அனாசயமான உயரத்திற்கு சென்றதை பார்த்தேன், வியந்தேன். தொடர்ந்து அவர் இது போன்ற ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ஒளிப்பதிவாளர் அருண், சண்டை பயிற்சி இயக்குநர் பிரபு, கலை இயக்குநர் வீரமணி என ஒவ்வொரு கலைஞர்களும் டீம் ஒர்க் ஆக பணியாற்றினர்,” என்றார்.

Leave a Reply

error:

Discover more from view7media

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading