“பரிமளா & கோ” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

A group of people posing for a photo at a press meet for the film 'Parimala and Co', with a promotional banner featuring the film's title and characters in the background.

சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ், இந்த முறை திரில்லர் கலந்த காமெடி டிராமா வகையில் இப்படத்தை உருவாக்கியுள்ளார். “தலைவன் தலைவி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12வது படைப்பாக முற்றிலும் புதிய கதைக்களத்தில் இப்படத்தை இயக்கியுள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் நிகழ்ச்சியில் படக்குழுவினரும் பல திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் ஜி.கே.எம். தமிழ்குமரன், “பரிமளா & கோ” படத்தின் முழு பொறுப்பையும் பாண்டிராஜ் மீது நம்பிக்கையுடன் ஒப்படைத்ததாக கூறினார். அவரது உழைப்பும் அர்ப்பணிப்பும் அபாரமானது என்றும், முழு குழுவும் ஒரு குடும்பம் போல இணைந்து பணியாற்றியதால் படம் சிறப்பாக உருவாகியுள்ளதாக தெரிவித்தார். படம் நிச்சயமாக பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

நடிகர் செண்ட்ராயன், இப்படத்தில் தனக்கு அருமையான கதாபாத்திரம் கிடைத்துள்ளதாக கூறினார். பாண்டிராஜ் மிகவும் பொறுமையாக நடிகர்களிடம் காட்சிகளை விளக்கி சொல்லிக் கொடுப்பார் என்றும், அவரது படங்கள் குடும்பம் முழுவதும் ஒன்றாக அமர்ந்து ரசிக்கக்கூடிய வகையில் இருக்கும் என்றும் பாராட்டினார். “பரிமளா & கோ”வும் அதுபோன்ற அழகான குடும்ப திரைப்படமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இயக்குநரும் நடிகருமான ஆதித்யா, பாண்டிராஜுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என கூறினார். பல டேக்குகள் எடுத்தபோதும் அவர் மிகவும் அமைதியாகவும் அன்பாகவும் வழிகாட்டியதாக தெரிவித்தார். ஜெயராம், ஊர்வசி போன்ற அனுபவமிக்க கலைஞர்களுடன் இணைந்து நடித்தது தன்னை மேலும் கற்றுக்கொள்ள வைத்ததாகவும் கூறினார்.

நடிகர் சஞ்சீவி, பல வருடங்களாக பாண்டிராஜுடன் பணியாற்ற ஆசைப்பட்டதாக கூறினார். “மூடர் கூடம்” படத்திற்குப் பிறகு இந்த வாய்ப்பு கிடைத்தது மிகவும் முக்கியமான தருணம் என்றும், பெரிய மேடையில் தன்னை இணைத்துக் கொண்ட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்தார்.

நடிகர் ஹர்ஷத், பாண்டிராஜ் படத்தில் நடிப்பது தனது கனவு நிறைவேறியது போல இருந்ததாக கூறினார். இயக்குநரின் வேகமான பணிமுறை மற்றும் தொழில்நுட்பக் குழுவின் ஆதரவு மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்ததாக தெரிவித்தார். இப்படத்தின் மூலம் தனது நீண்டநாள் ஆசை நிறைவேறியதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

நடிகை காயத்திரி, பாண்டிராஜின் படங்களில் ரசிகையாக வளர்ந்த தன்னிடம் இப்பட வாய்ப்பு வந்தது கனவு நனவானது போல இருந்ததாக கூறினார். படத்தின் முழு குழுவும் மிகுந்த ஆதரவாக இருந்ததாகவும், இந்த மே மாதம் வெளியாகும் இப்படத்தை மக்கள் நல்ல முறையில் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் பகிர்ந்துகொண்டார்.

நடிகை அனந்திகா, “பரிமளா & கோ” தன்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமான படம் என்று கூறினார். ஜெயராம், ஊர்வசி, சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மிகச் சிறந்த அனுபவம் என தெரிவித்தார். குடும்பம் முழுவதும் சிரித்து ரசிக்கக்கூடிய அழகான திரைப்படமாக இது இருக்கும் என்றார்.

நடிகை பூர்ணிமா ரவி, இந்த படத்தில் நடுவில் இணைந்தாலும் தன்னிடம் மிகுந்த நம்பிக்கை கொடுத்து வாய்ப்பு வழங்கிய குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். ஊர்வசி தனது ரோல் மாடல் என்றும், ஜெயராமுடன் ஒரே படத்தில் இருப்பது தனக்குப் பெரிய சந்தோஷம் என்றும் கூறினார். இசையமைப்பாளர் பிராக்ஸன் இந்த படத்திற்கு அழகான பாடல்களை வழங்கியுள்ளதாகவும் பாராட்டினார்.

சாண்டி மாஸ்டர், ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின் போன்ற லெஜண்ட்ஸ் உடன் இணைந்து நடித்தது மிகப்பெரிய அனுபவம் என்று கூறினார். பாண்டிராஜின் வேகமான பணிமுறை மற்றும் படப்பிடிப்பு தளத்தில் இருந்த சிரிப்பு, கலாட்டா ஆகியவை மறக்க முடியாத அனுபவம் என தெரிவித்தார். இப்படத்தில் மிஸ்டரி, காமெடி, எமோஷன் அனைத்தும் இருக்கும் என்றும் கூறினார்.

சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, இந்த படம் தன்னுக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்ததாக கூறினார். படப்பிடிப்பு தளம் ஒரு குடும்பம் போல இருந்தது என்றும், ஜெயராம் மற்றும் ஊர்வசியின் நகைச்சுவை உணர்வு அனைவரையும் சிரிக்க வைத்ததாகவும் தெரிவித்தார். படத்தை எவ்வளவு மகிழ்ச்சியாக உருவாக்கினார்களோ, அதேபோல் மக்கள் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் பகிர்ந்தார்.

நடிகை ஊர்வசி, இந்த படம் மிகவும் சிறப்பான அனுபவம் எனக் கூறினார். கதை கேட்ட தருணத்திலேயே அது ஒரு வெற்றி படமாக இருக்கும் என்ற நம்பிக்கை வந்ததாக தெரிவித்தார். பாண்டிராஜின் எழுத்து மற்றும் அவரது இயல்பான உரையாடல் அமைப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறினார். பல வருடங்களுக்கு பிறகு ஜெயராமுடன் மீண்டும் இணைந்து நடித்தது மகிழ்ச்சி அளித்ததாகவும், படப்பிடிப்பு நாட்கள் குடும்பம் போல இருந்ததாகவும் கூறினார்.

நடிகர் ஜெயராம், இப்படத்தின் உண்மையான ஹீரோ திரைக்கதையே என்று குறிப்பிட்டார். லைக்கா போன்ற பெரிய நிறுவனம் இணைந்தது முதல், ஊர்வசி, மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்ட பல திறமையான கலைஞர்கள் இணைந்தது வரை அனைத்தும் இப்படத்திற்கு பலமாக அமைந்துள்ளதாக கூறினார். படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ஊடகங்களின் ஆதரவு தேவை என்றும் தெரிவித்தார்.

இயக்குநர் மிஷ்கின், ஜெயராம் மற்றும் ஊர்வசி இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்கள் என பாராட்டினார். பாண்டிராஜ் மனிதர்களின் மொழியையும் உணர்ச்சிகளையும் மிக இயல்பாக திரையில் கொண்டு வரக்கூடிய இயக்குநர் என்றும் கூறினார். “பரிமளா & கோ” ஒரு டார்க் காமெடி பாணியில் மக்களை சிரிக்க வைக்கும் திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.

இயக்குநர் பாண்டிராஜ், இந்த கதை மூன்று வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டது என்று கூறினார். ஆரம்பத்தில் “பரிமளா ஃபேமிலி” உள்ளிட்ட பல தலைப்புகள் யோசிக்கப்பட்டபோதும், இறுதியில் “பரிமளா & கோ” என்ற பெயரே அனைவராலும் தேர்வு செய்யப்பட்டது என்றார். ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின் போன்ற கலைஞர்கள் கதையை கேட்டு சிரித்தபோதே படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வந்ததாக தெரிவித்தார்.

இந்த படத்தின் கதை, வித்தியாசமான குடும்பத்தைச் சுற்றி நகர்கிறது. சென்னை முதல் கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு வரை பயணிக்கும் இந்த திரில்லர் காமெடி திரைப்படம், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகள் கலந்த குடும்ப பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகியுள்ளது. ஜெயராம், ஊர்வசி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சாண்டி, அனந்திகா, யோகிபாபு மற்றும் மிஷ்கின் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

“பரிமளா & கோ” திரைப்படம் லைக்கா புரொடக்ஷன்ஸ், Tamilkumaran Productions Pvt Ltd மற்றும் Pasanga Productions இணைந்து தயாரித்துள்ளன. ஜார்ஜ் C. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், Foxn இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். திரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Leave a Reply

error:

Discover more from view7media

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading